
திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கடந்த மாதம் முதல் பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல தற்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அனுமதி அளித்துள்ளார். வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் 15 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும், அண்ணாமலையார் கோவில் மற்றும் அதன் கிரிவல பாதையை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

சித்ரா பவுர்ணமிக்கு 40 இடங்களில் அன்னதானம் வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்குவோர் https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் மூலம், முன்பதிவு செய்து அனுமதி பெற வேண்டும் என்றும், அனுமதிக்கப்படாத இடங்களில் அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தள்ளுவண்டிகள் மூலம் வியாபாரம் செய்பவர்கள் விவரங்களை பதிவு செய்துகொள்ள முன் அனுமதி பெற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Source : Top Tamil News